முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : மாமன்

பாகம் ஒன்பது : மாமன் 

அவளைக்கேட்டால் அவர் மனிதருள் மாணிக்கம் என்பாள். படிப்பில் புலியாயிருந்த அவரை campus நுழையவிடாது தடுத்தவர்கள் பின்னாளில் அதற்குக் கொடுத்த விலை மிகமிக அதிகம் தான். ஈழத்தில் நடந்தது ஒரு குருஷேஸ்திரம் என்றால், அதில் கிருஷ்ணர் இவராய்த் தான் இருந்திருப்பார். அவர் இருந்தவரை அர்ஜுனனைத் தோற்கவிட்டதில்லை. அர்ஜுனன் தோற்ற போது அவர் உயிரோடு இருந்திருக்கவில்லை. 

அப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரைப் பற்றி அவள் சொல்லப்போனால் அது மாபெரும் சமுத்திரத்தை ஒரு சிறுமி அள்ளிவிட முயற்சிப்பது போல்தான் இருக்கும். ஆனாலுமே அவள் அள்ளிய அந்த சிறு துளிகளும் சேர்ந்துதானே ஒரு சமுத்திரமாகிறது? 

"உனக்கு இன்னும் வயசிருக்கு. ஒரு மூண்டுனாலு வருசத்துக்குப் பிறகு வரேக்கை சொல்லு, கூட்டிட்டுப் போறன்..". எங்கே போவதேண்டு தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று முன்னொருநாள் அவர் சொல்லி விட்டுப் போன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது.

இத்தனை நாள் எப்படி மறந்தோம் அவரை? பார்த்தது பேசியது என்னமோ ஓரிரு தடவைதான். ஆனால் அந்தச் சிறு சிறு தருணங்களிலேயே அவளை முழுதாய்க் கொள்ளையடித்துச் சென்றிருந்தார். அவளைப் பொறுத்தவரை அவளின் முதலும் கடைசியுமான ஹீரோ..  நிஜ ஹீரோ.. அவர் தான். 

காந்தியையும் நேருவையும் பற்றி கதையளப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திரபோசைப்பற்றிக் கதைக்க தைரியம் இருக்கு? வாய்வீரத்துக்கு மதிப்புக்கொடுப்பவர் யாரும் செயல்வீரர்களைக் கண்டுகொள்வதேயில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு மாவீரர்.. செயல் வீரர் தான் அவர்.

அவரை ஒரு போராளியாய் சந்தித்த அந்த முதல் நாள் இன்னும் பசுமையாய் நெஞ்சிலிருக்கு. அப்போது ஒரு சிறு கைத்துப்பாக்கிதான் வைத்திருந்தார். ஆறு குண்டு போட்டு அடிக்கிறது. விவரம் தெரியாத வயது. அப்பெல்லாம் AK47 எண்டு பெரிய பெரிய துவக்கு தூக்கிக்கொண்டு பலர் போறதைப் பார்த்தவள், இவர் ஏன் இந்தச் சின்னத் துவக்கைத் தூக்கிக்கொண்டு திரியிறார் எண்டு நினைத்திருக்கிறாள். 

"ஒருதரம் சுட்டுப் பார்க்கவேணும்" எண்டு அவள் ஆசைப்பட்டபோது, "துவக்குத்தான் எங்கடை உயிர் அதை யாருக்கும் குடுக்ககூடாது" எண்டு அவர்சொன்னதைப் புரிந்து கொள்ளும் நிலையிலில்லை. 

கடைசியாய் அவளது தொந்தரவு தாங்காமல், தூக்கி மடியிலிருத்தி அந்தச் சின்னக் கையை எடுத்து துவக்கின்மேல் வைத்து தன் கையால் மூடி, பிஞ்சு விரல்களின் மேல் அவர் விரல்கள் மெதுவாய் அழுத்தியபோது, அது வெடித்தா என்ன?  ஓடிச்சென்று முற்றத்தில் பார்த்தாள். எதையுமே காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிவந்து "நீங்க என்னை நல்லா எமாத்திப்போட்டீங்க" என்று கண்கலங்கி அறைக்குள் சென்று படுத்தவள்தான் அவர் திரும்பிப் போகும்வரை வெளியே வரவேயில்லை. 

பிறகொருதரம் அவரின் அம்மாவின் ஈமைச்சடங்கில் தூரத்தில் நின்று பார்த்தது. துருவித் துருவிப் பார்த்தும் கண்ணில் ஒருசொட்டுக் கண்ணீரை காணோம். இறுகிப் போய் நின்றிருந்தார். "இயக்கத்துக்குப் போனா அழக்கூடாதாம்" பக்கத்தில் நின்ற யாரோ சொன்னார்கள். 'பந்தபாசமெல்லாம் ஒருமாயை' என்று எங்கேயோ புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வர அவர்மேல் மரியாதை இன்னும் கூடிவிட்டிருந்தது.

"அக்கா.. அக்கா.." 
அவள் ஓடிச்சென்று யன்னல்வழியே கேற்றைப் பார்த்தாள். புழுதி மூடிப்போய் ஒரு பிக்-அப் வாசலில் நின்றிருந்தது. அம்மாவின் தம்பிகள் எல்லாருமே வெளியூர்தான், வருவது அபூர்வம். அப்பிடியிருக்க அக்கா என்று சொல்லிக்கொண்டு உரிமையாய் அதுவும் இதிலை வந்து இறங்குவது யாராயிருக்கும்? யோசனையுடன் கதவைத் திறந்தாள்.

"என்னடி.. இப்பிடி நல்லா வளந்திட்டாய்?" என்று சொல்லித் தோளில் தட்டியவரை நிமிர்ந்து பார்த்தபோது, பெரியவளாகு முன்னமே நாணம் எட்டிப்பார்த்தது.
"அம்மா.. அம்மா.. கண்ணன் மாமா வந்திருக்கிறார். ஓடியாங்கோ.." மகிழ்ச்சிபொங்க கத்திக் கொண்டே ஓடிப்போய் அறைக்குள் ஒளித்துக்கொண்டாள். நெஞ்சு படபடவென்றது.

"என்ன நீ..? இப்படிக் கறுத்துப்போய் வந்திருக்கிறாய்?" அம்மாதான் கேட்டது. 'காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு' தானே என்றெண்ணிச் சிரித்துக்கொண்டாள். 
"என்னக்கா செய்யுறது? ஒரே வெய்யிலுக்கை தானே திரியிறது. போராட்டமெண்டு போயிட்டா இதெல்லாம் பாக்க ஏலுமே?" சொல்லிவிட்டு "எங்கையக்கா உவளைக் காணேல்லை. வரேக்க வாசல்ல நிண்டாள். பிறகு ஓடிட்டாள்" என்றபடி திரும்பிப் பார்த்தபோது அதுவரை திரைசீலைக்குள் மறைந்து நின்று அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளைக் கண்டுவிட்டார். 

"இஞ்சை வா. முந்தி வந்தா என்னெண்டா துவக்கைத் தரச்சொல்லி அடம்பிடிப்பாய். இப்ப என்ன புதுசா வெட்கப்படுறாய்? " அவர் இத்தனை நாளாகியும் அந்த நிகழ்ச்சியை ஞாபகம் வைத்துக் கேட்டபோது  அவளின் சந்தோசத்தைக் கேட்கவா வேண்டும். அதுவரை அவர் பக்கத்தில் துப்பாக்கியுடன் 'உர்ர்' எண்டு மூஞ்சியை வைச்சுக் கொண்டு சுற்றும் முற்றும் நோட்டம்விட்டுக்கொண்டிருந்தவன் கூட இப்போது சிறிதாய்ப் புன்னகைத்தான்.

"இருந்து சாப்பிட்டுப் போவன்?"
"இல்லையக்கா. நான் அவசரமாப் போகவேணும்." 
"வீட்டை போட்டே வாறே?"
"இல்லை.. இனித்தான்." எழுந்தவரை,
"இவ்வளவு தூரத்திலிருந்து வந்திட்டு.. ஒரு டீயாச்சும் குடிச்சிட்டுப்போ."
"வேண்டாமக்கா. வெறும் தண்ணி மட்டும் குடுங்கோ.."
"சும்மாயிரு. கனநாளைக்குப் பிறகு வந்திட்டு.. இப்பல்லாம் என்ன குடிக்கிறனீ?  கோப்பியோ.. டீயோ?"
"எதெண்டாலும்.." என்று இழுத்தபடி, அருகிலிருந்தவனை என்ன என்பதுபோல் பார்க்க, அவன் பேசாமல் தலையாட்டினான். எப்படி இவரால் கண்களாலேயே கதைக்க முடிகிறது? வியந்தாள்.
"ரெண்டு போடுங்கோ.." சொல்லிவிட்டு ஷோகேசுக்கு மேலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்க் கதிரையில் அமர்ந்தார். 

"இஞ்சை வா.. வந்து உந்த வயலினில் ஏதோ இயக்கப்பாட்டு வாசிப்பியே அதை அவனுக்கு வாசிச்சுக் காட்டன்.." அவள் மாட்டேன் மாட்டேன் எண்ணவும் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து விட்டுவிட்டு  கையிலை வயலின் பெட்டியை திணித்துவிட்டு   குசினிக்குப் போய் விட்டார் அம்மா.

வெட்கத்தில் காலால் மார்பிள்நிலத்திலேயே கோலம் போட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்தவர்  புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, கைகளை நெஞ்சுக்குக் குறுக்கால் கட்டிக்கொண்டு, "என்ன பாட்டு? எங்கை எனக்கு வாசிச்சுக் காட்டு பாப்பம்?" அவருக்கேயுரிய அந்தப் புன்சிரிப்புடன் ஒருபக்கம் லேசாய் தலையைச்சரித்து  கேட்டதை ரசித்தாள்.

அவள் வயலினை எடுத்து ஷோகேசுக்குப் பின்னால் மறைந்திருந்து "குயிலே பாடு.." வாசிச்சு முடிக்கவும்,  "இவள் இப்பெல்லாம் ஒரே இயக்கப் பாட்டுத்தான் வாசிச்சுக் கொண்டிருக்கிறாள். எக்ஸாம்ல கேக்குறதை வாசிச்சுப் பழகு எண்டு சொன்னாலுமே கேக்கிறாளில்லை. அதால எப்பவுமே செக்கன்ட் கிளாஸ்தான் வருகுது." குசினியிலிருந்தவாறே அம்மா வத்திவைக்க, அவள் கோபமாய் வயலினின் சட்ஜ நரம்பை அறுத்துவிடுவது போல் தட்டினாள். வெளியில் நாய் குலைத்தது. கூடவந்தவன் எழுந்து சென்று என்னவென்று பார்க்கப் போய்விட,

அப்போதுதான் கிட்டவந்து, அவள் கைகளிலிருந்து மீளத்துடித்த வயலினுக்கு விடுதலை கொடுத்துவிட்டு, கோபத்தில் சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். குனிந்ததலை நிமிராமலிருந்தவளின் நெற்றியில் விழுந்திருந்த முடியை விரல்களால் விலக்கி... "அம்மா சொல்றதைக் கேட்டு, நல்லாப் படிக்க வேணும் என்ன?" என்றபடி கன்னத்தை தட்டிவிட்டார். உடல்சிலிர்த்திட நிமிர்ந்தவள், அந்தக் கண்களை முதன் முதலாய் நேருக்கு நேர் இவ்வளவு அருகில் இப்போது தான் பார்க்கிறாள். எவ்வளவு தீர்க்கம்? காந்தக் கண்கள் என்பது இவைதானா? கண்ணன் என்பதன் காரணப்பெயர் இப்போது புரிந்தது.

ஒரு ஆணின் கண்களுக்கு இவ்வளவு சக்தியிருக்க முடியுமா என்ன?  அவை அவளை ஆழமாய் ஊடுருவிச் செல்லத் தயங்கித் தடுமாறியவள், ஒருவாறு சமாளித்துப் பின் எச்சிலை விழுங்கியபடி,
"நானும் உங்க கூட வரட்டுமா..?" வெட்கத்தை விட்டுக் கேட்டே விட்டாள்.




யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தாள். மெலிதான தோற்றம், சற்றே உயரமாயிருந்த  அவனை முன்பின்  பார்த்ததில்லை. "எதுவும் கதைக்காமல் பின்னாலையே வா." மெலிதான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறு எண்டு போய் இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூமிட்க்குள் சென்று மறைந்து விட்டான்.

போவதா வேண்டாமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கையில் போன் அடித்தது.
"அவன் கூடப் போ. வன்னிக்குப் போகிறத்துக்கு ஹெல்ப் பண்ணுவான்." சொன்னது யார்? தெரியவில்லை.
இதுவரைக்கும் வந்தாச்சு. பேசாமல் போய்த்தான் பாப்பமே? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போய்ப் பார்த்தால் அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர், ஒரு பெண் உட்பட.

ஒருவிதத் தயக்கத்துடன் உள்ளே சென்றதும் முதலில் வந்தவன் அவசர அவசரமாய்க் கதவைப் பூட்டி விட்டு,
"எங்கை வந்து என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாய் எண்டு தெரியுமே? யாரும் கேள்விப் பட்டால் உன்ட  உடல்ல உயிர் இருக்காது." அவன் குரலில் பதற்றமிருந்தது.

உயிருக்குப் பயந்தவள் எண்டால் இதுவரை வந்திருப்பாளா என்ன? அவர்களும் யோசித்திருப்பார்களோ?
சிறிது நேர அமைதியைக் கலைத்தபடி அந்தப் பெண்தான் கேட்டாள்.
"சரி, உமக்கு உள்ளை யாரையும் தெரியுமே?"
இப்போது அவளுக்குச் சந்தேகம் வந்தது. இவர்கள் உண்மையிலேயே தொடர்பா? இல்லை..?
"உங்களை நான் எப்பிடி நம்புறது?", ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

"நம்பத் தேவையில்லை, நீ போகலாம்.." அதுவரை அமைதியாயிருந்த அந்தப் பெரியவர் சொன்னார்.
அவரைப் பார்த்தால் வயது  ஒரு நாப்பதுக்கு மேலிருக்கும். தலைவரின் முகச்சாயல் இருந்தது. தலைவரை இதுவரை அவள் நேரில் பார்த்ததில்லை. என்ன ஆனாலும் சரி, சாவதுக்குமுன் எப்படியாச்சும் ஒருமுறை பாத்திட வேணும், அவரையும் தான்!

"கண்ணன் மாமாவைத் தெரியும்.. பிறகு.. அவரின்டை.." எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்..
"இயக்கத்திலை எத்தனை கண்ணன்கள் இருக்கினம். நீ ஆரைச் சொல்றே?"
"இயக்கத்திலை எத்தினை கண்ணன்கள் எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் என்ட கண்ணன் மாமாவை இயக்கத்திலை இருக்கிற எல்லாருக்குமே தெரியும். அவர்தான் ........." ஆக்ரோஷமாய்  அவரின்  பெயரை அவள் சொல்லி முடித்தபோது எல்லோர் முகங்களும் பேயறைந்த மாதிரி ஆகிவிட்டிருந்தது.

***** 

தொடரும்..

கருத்துகள்

மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
எழுத்துக்கள் நீரோட்டமாய்
இயல்பாய் பாய்கிறது உங்களிடம்...
நன்று சகோதரி...

http://ilavenirkaalam.blogspot.com/2011/11/blog-post_05.html

பிரபலமான இடுகைகள்