முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : ரெண்டு பவுண்

பாகம் ஒன்று : ரெண்டு பவுண் 

யாழ்ப்பாணத்தைப் பிடிப்பதற்காய் சண்டை மும்முரமாய் நடந்துகொண்டிருந்த சமயம், கடைசி முறையாக அந்த ரெண்டு பவுனுக்கு வந்திருந்தார்கள்.

"வீட்டிலை பெரியவங்கள் யாராச்சும் இருக்கினமே?" கேட்டவரை முன்னம் பார்த்ததில்லை.
"அம்மா மட்டும்தான். ஆட்டுக்கு குழை ஓடிச்சுக்கொண்டு வளவிலை நிக்கிறா." 'திரும்பி வர எத்தினை நாளாகுமெண்டு தெரியாது. அதுவரை ஆடு பசியிலை நிக்ககூடாது. அதால நிறைய குழை ஓடிக்கவேணும்' எண்டு சொல்லி அவளை வாசல்லை காவல் வைச்சிட்டு போயிருந்தா.
"அவவைக் கூப்பிடுறீங்களே ஒருக்கா?"
"நீங்க யார்.. என்ன எண்டு கேட்டா.." தயங்கியவளிடம்
"இயக்கத்திலை இருந்து மண் மீட்பு நிதி வாங்க வந்திருக்கிறம் எண்டு சொல்லுங்கோ.."

முன்னம் கூடப் பலதரம் இவ்வாறு வந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் எங்களாலும் கூட போராட்டத்துக்கு ஏதோ ஒருவிதத்திலை பங்களிப்புச் செய்ய முடியுதே என்று பெருமைப் பட்டிருக்கிறாள். ஆனால் இந்தமுறை காசாககூடத் தரலாம் என்ற போதுதான் அவளுக்கு சந்தேகம் முதல் முதலாய் எட்டிப் பார்த்தது. அவர்களின் ஊரில் இப்படித்தான் பலபேர் காசை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி பிறகு வெளிநாடுகளில் காரும் பங்களாவும் எண்டு செட்டில் ஆகியிருக்கினம் எண்டு கேள்விப் பட்டிருக்கிறாள். ஒருவேளை அது உண்மையாகவிருக்குமோ? பெரியமாமா வேறை ரெண்டு கிழமைக்கு முன்னம் தான் "நீ இயக்கத்தை வெறுக்கப் போற நாள் கூடிய சீக்கிரம் வரப்போகுது." என்று தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்.

இப்படித்தான் ஒருமுறை அவர்கள் மீட்புநிதி வாங்குவதற்காய் வந்திருந்தபோது அம்மம்மா வேறுவீட்டில் இருந்ததால் அவர்களும் தனியாய் ரெண்டு பவுன் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் வீடுகட்டி முடித்ததாலோ என்னமோ பிறகு மாமாமாரிடம் வங்கித்தருவாதாய்ச் சொல்லி அம்மாவை கொடுக்கச்சொல்லியிருந்தா. அப்போ பலிகொடுக்கப்பட்டது அவள் சின்ன வயசில போட்ட ஒருசோடிக் காப்புத்தான்.  இந்தச் சின்ன வயசிலையே தன்னால போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்ய முடியுதே எண்டு ஒருவித கர்வம் வந்தது. 'எப்பிடியும் இதுவும்  காணாமத்தான் வரும். அம்மா ஒளிச்சு வைச்சிருக்கிற  என்ரை அறுந்துபோன தூக்கணத்தை எடுத்துக் குடுக்கச் சொல்லலாம்' என்று நினைத்துக்கொண்டிருக்கையில், 

"ரெண்டு பவுனுக்கு ரெண்டு மஞ்சாடி கூட நிக்குது" என்று சொன்ன எடை போட்டுப் பார்த்த அண்ணாவை வினோதமாய்ப் பார்த்தாள். இதுவரை எந்த நகைக்கடையிலும் கேட்காத வார்த்தையிது. எவ்வளவு போட்டாலுமே "பழைய நகை தானேயம்மா.. செய்கூலி, சேதாரம் எண்டு போக ரெண்டு மஞ்சாடி தொக்கிநிக்குது" எண்டுதான் சொல்லுவினம். அதனேலேயே அதுவரை அவர்களின் மேலிருந்த மதிப்பு இன்னும் உயர்ந்துவிட்டிருந்தது.

அப்படிப் பட்டவர்கள் இப்போதுவந்து காசு கேட்கிறார்கள், அதுவும் ரெண்டுநாளில் எங்கடை இடத்துக்கு ஆர்மி வந்துவிடுவான் என்கிற நிலையில் நேற்றுத்தான் மூட்டைமுடிச்செல்லாம் கட்டி ஓடுவதுக்கு தயாராக வைத்திருந்தோம். "ரோட்டிலை யாராச்சும் மூட்டைமுடிச்சோட வெளிக்கிட்டுப் போனா சொல்லு, நாங்களும் வெளிக்கிடவேணும் சரியே?" என்றுசொலித்தான் அம்மா அவளை வாசல்ல காவலுக்கு வைத்திருந்தார்.


வீட்டில் காசுநிலவரம் எதுவும் அவளுக்குத் தெரியாது. எல்லா கணக்கு வழக்கும் அம்மாதான் பாக்கிறது. தோட்டத்தில தேங்காய் மாங்காய் விக்கிற காசு பார்த்திருக்கிறாள். மற்றபடி அப்பா உழைக்கிறது அவளுக்கு சீதனம் சேர்க்கப் போகுது எண்டுதான் சொல்லியிருக்கிறார்.  சைக்கிள் ஒட்டுவதுக்கேண்டு மாசத்திலை ஒருக்கா வாங்கிற அந்த ரெண்டு ரூவாயை விட அவள் கையிலை ஒரு சல்லிக்காசு  கொடுப்பதில்லை. வாழ்க்கை முழுது சந்நியாசியாயிருந்து உழைக்கிற காசிலை அப்பிடி ஒருகலியானம் தேவைதானா என்று பலதடவை யோசித்திருக்கிறாள்.


"அக்காண்ட கலியாணத்துக்கு இருக்கிற நகைநட்டைவிட எப்பிடியும் ஒரு இருவத்தஞ்சு முப்பது லட்சம் தேவைப்படும். நான்தான் உழைச்சுக் கட்டவேணும். வைரத்தோடு வேற வேணுமாம்." என்றவனை வினோதமாய்ப் பார்த்தாள்.

இருவத்தஞ்சு முப்பது வருசமா அப்பா உழைச்சு உழைச்சு ஓடாத்தேஞ்சு அவளுக்கு சீதனமாய்ச் சேர்த்த காசுகூட அவ்வளுவு வருமோ தெரியாது. எதற்காய் இப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயம் எல்லாம்? மனிசரை நிம்மதியாய் வாழவிடாமல் கடன் மேல கடன் வாங்கி.. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் தேவைதானா? அவளுக்கு விளங்கவில்லை.

"அப்போ எங்கடை கலியாணம் இப்போதைக்கு இல்லை எண்டு சொல்லவாறியா?" ஒருபக்கம் சந்தோசமாக இருந்தது. அப்பாவின்  நச்சரிப்பு தாங்கமுடியாமல் தான் இந்தப் பேச்சே எடுத்தது.

"இன்னும் எனக்கு வேலை கிடைக்கேல்லை. கிடைச்சபிறகுதான் எதையும் யோசிக்கலாம்." 

'அப்போ அந்த முப்பதுலட்சம்?' நாக்கு நுனிவரை வந்துவிட்ட கேள்வியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். யார் எப்படிப் போனால் அவளுக்கென்ன.

பேசாமல் மேல படிக்க வெளிநாட்டுக்குப் போய்விடலாம் என்றாலும் காசுவேணும். "என்ன எண்டாலும் கலியாணத்தைக் கட்டிட்டு பிறகு செய்." அப்பா தீர்மானமாய் சொல்லிவிட்டிருந்தார். பெண்ணைப் பிறந்தாலே யாராச்சும் ஒருத்தரின் கயிலை பிடிச்சுக்கொடுத்திட வேண்டும் எண்ட தவிப்பில் அவளின் உரிமைகள் மறுக்கப்படுவதை யாருமே உணர்வதில்லை.

அவளது தேவைகள் என்றால் மிகக் குறைவுதான். நிறையவே இல்லாவிட்டாலும் அவளது  அரசாங்க உத்தியோகம், ஒரு பத்துப் பதினஞ்சு வருசத்தில பென்ஷன் வரும். யாருடைய தயவும் வேண்டியிருக்காது. ஆனால் அத்துடன் விட்டார்களா அவளை?

"இத்தினை நாளாய் எனக்கு தாறத்துக்குத்தான் உழைக்கிறன் எண்டு சொல்லிட்டு, இப்படி  தூக்கிக்  கொடுக்கிறத்துக்குத்தான் இத்தினை வருசமா தனிய இருந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்சநீன்களா?" அவளின் கடைசிக் கனவும் தகர்ந்ததில் கோபம் கோபமாய் வந்தது.
"எங்கடை கடமையைத்தான் செய்தம். கலியானத்துக்குப்பிறகு நீ கடன் அதிதெண்டு கஷ்டப்படக் கூடாது அதுதான்." இவர் குடுத்தாலுமே, அவர்கள் கடன் வாங்கத்தான் போகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு பொம்பிளைபிள்ளையை வைச்சுக்கொண்டே அவளிண்ட அப்பாவுக்கு இவ்வளவு கனவெண்டா, அவர்கள் ரெண்டு பெடியங்களையுமேல்லே பெத்துவைச்சிருக்கினம்.

அவனைப்பிடிக்கும்.. நிறையவே.. இதுவரை கண்ணீரைத் தவிர வேறெதையுமே அறியாத அவளை தினம் தினம் சிரிக்க வைத்தான்.  பேச வைத்தான். மறுபடி எழுதவைத்தான்.  ஆனா அதுக்காக கலியாணம் எண்டபேரில யாரோட வாழ்க்கையையும் பாழாக்க முடியாது. அவனுக்குமெண்டு தன் மனைவியைப் பத்தி ஒரு கனவிருக்கும்தானே.





"அதுக்கு..? எனக்கெண்டு இதுவரைக்கும் பெரிசா எதுவும் கேட்டிருக்கிறனா? இதுவரைக்கும் படிச்சது கூட  scholarshipல தானே.." அவள் அங்கை போய் ஒண்டும் படிச்சுக் கிழிக்கப் போறதில்லை. ஆனாலும் நிம்மதியா கொஞ்சநாளாச்சும் யாரோடை தொனதொனப்புமில்லாமல் இருக்கலாமே எண்டுதான். அவளால் எல்லாரையும் போல சராசரி மனைவியாய் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு இதுதான் வாழ்க்கை எண்டு அதுக்குள்ளயே சுத்திச் சுத்தி வரமுடியாது.

ஆயிரம் ஆயிரம் வேங்கைகளைப் போலவே அவளுக்குமொரு கனவிருந்தது. ஒரு தேசமிருந்தது. அது காலத்தின் கட்டாயத்தில்  அழிக்கப்பட்டாலுமே அதன் வலியிருக்கிறதே. அதைப் பதிவு செய்ய வேண்டும். ஆழமாக.. மிக ஆழமாக.. அவளின் கனவுகளை.. அவர்களின் கனவுகளையும் சேர்த்தே..

"இது நீ கேட்காமலே நாங்கள் செய்யவேண்டியது. அது எங்கடை கடமை." கடமையாவது மண்ணாங்கட்டியாவது. அவளது தோழிகள் பத்துப் பதினைஞ்சு பவுணிலை கழுத்தைச் சுத்திப் போட்டுக்கொண்டிருக்கிறதை அவளுக்கும் மாட்டி அழகுபாக்கவேனும். அதுதானே?

முந்தி அங்கை எண்டாலும் பரவாயில்லை அவங்கள் இருக்கேக்கை நடுநிசியிலையுமே நகையைப் போட்டுக்கொண்டு தைரியமாப் போகலாம். இங்கை இப்ப பொட்டுத் தங்கத்துக்காக பட்டப்பகல்லையே கொலை நடக்கிற இடத்தில இருந்தும் கூட  'பொம்பிளைப் பிள்ளையள் நகை போடாமல் வெளிய போகக் கூடாது' என்ற அம்மாவின் அரியண்டத்துக்காகவே இப்பகொஞ்சநாளா அவளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒருசோடித் தோடு, அந்த முக்கால் பவுண் சிங்கப்பூர் செயின், ஒரு ராசிக் கல்லுவைத்த மோதிரம். எல்லாம் சேர்த்து என்ன ஒரு ரெண்டு பவுன் இருக்குமா..? 


***** 

தொடரும்..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்