முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : ஒரு கொடி

பாகம் இரண்டு : ஒரு கொடி

"எல்லாம் சரி தான். ஆனா  கொடி வாங்கிறத்துக்கு எப்படியும் ஒரு ரெண்டு லட்சம் வரும். கடன் தான் எடுக்க வேணும்." என்றபோதே கடன்தான் வாழ்க்கையாகிவிட்டிருன்தது புரிந்தது. வேறுவழியில்லை.

பேசாமல் முன்வீட்டு அக்கா போட்டுக்கொண்டிருந்ததைப் போல ரெண்டு பவுணிலை ஒருதாலிய வாங்கி  மஞ்சள் கயித்தில கட்டிவிட்டா கலியாணம் எண்டு சொல்ல மாட்டினமே? தினமும் மஞ்சள் பூசிக் குளித்துவரும் அவவின் முகத்தைப் போலவே தாலியும் பார்க்க அழகா இருக்கும். எங்கடை தாலி மாதிரி இல்லாம அவங்கடை இலச்சினை பொறிச்சு, பாயும் புலியின் கண்களைப் போலவே சும்மா தகதகவென்று மின்னும். பத்துப் பவுனில தாலிய செஞ்சு பெட்டில பூட்டி வைக்கிறத்துக்கு, இது எவ்வளவோ மேல் என்று தோன்றியது. 

ஒவ்வொரு முறையும் அவா வயலின் கிளாஸ்சுக்கு வரேக்க அவளுக்கு ஒருக்கா எடுத்து காட்டவேணும். இல்லாட்டி மூஞ்சிய தூக்கி வச்சுக்கொண்டு இருப்பாள்.

"உள்ளை யாரையேன் பாத்து வைச்சிருக்கிறியே என்ன? " கடைசியாய் வந்தபோது அம்மா கேட்டதுக்கு
"அதெல்லாம் இல்லை.." என்று அவர் சொன்னதைக்கேட்டு கொஞ்சம் நிம்மதியாய்த்தானிருந்தது.
"போய் ஏழு வருசத்துக்கு மேலை தானே. கலியாணம் கட்டலாம் தானே?" அம்மா விட்டபாடில்லை.
"அதுக்கெல்லாம் எனக்கு இப்ப நேரமில்ல சும்மா போங்கோ" சிரித்துக்கொண்டே சொன்னபோது கொஞ்சம் கவலையாய் இருந்தது. 

அடுத்தமுறை வரேக்கை அவரிட்டை சொல்லி இப்படி ஒரு தாலி செய்து கொண்டுவரச் சொல்லவேணும். ஆனா யாரேன் அறிஞ்சா இன்னும் பெரியவளே ஆகேல்லை அதுக்குள்ளை கலியாண ஆசையைப் பார் எண்டு கிண்டல் பண்ணுவினம். அதாலை அதுவரைக்கும் அவவிண்ட தாலியைப் பாத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

"கொடியெல்லாம் வேண்டாம். பேசாமல் மஞ்சள் கயித்தில தாலியைக் கட்டலாம் தானே?" அவள்தான் கேட்டாள்.
"எங்கடை தகுதிக்கு சரிப்பட்டு வராது. நாலுபேர் நாலுவிதமா நாக்கிலை பல்லைப்போட்டு கதைக்குங்கள். குறைஞ்சது ஒன்பது பவுனிலையாச்சும் கொடி போட வேணும்." அவள் அம்மா சொன்ன தகுதி என்னவென்று புரியவில்லை. ஒரு பத்துப் பவுன் கொடியிலை போற தகுதியைக் காப்பாத்த வாழ்க்கை முழுவதும் போராட வேணுமா என்ன?

ஒரு தொப்புள் கொடி உறவுக்காய்.. சமூகத்தில் அதன் அங்கீகாரத்திற்காய்.. சன்றோனாக்கும் அதன் கல்விக்காய்.. தொலைந்துபோன உரிமைகளுக்காய்.. வாழ்க்கைப் பாதையில் போராடிப் போராடி.. கடைசியில் என்னத்தைக் கண்டோம்?

"ஏற்கனவே போராட்டம் போராட்டம் எண்டு போய் எங்கடை சனம் இருக்கிறதையும் இழந்ததுதான் மிச்சம். வெளிநாட்டிலை போய் யாராருக்கெல்லாமோ கொடிதூக்கிக்கொண்டு அடிமையாய் இருந்து அவங்களுக்கு உழைச்சுக் கொட்டுறதை கொஞ்சம் பொறுமையாய் இருந்து சொந்த நாட்டிலையே செய்திருந்தால் இன்றைக்கு எங்கடை சனம் எவ்வளவு முன்னேறி இருக்கும்." சொன்னது நிச்சயமாய்  அவளில்லை.

அவளுக்கு உந்த அரசியல் தெரியாமலிருக்கலாம், புரியாமலிருக்கலாம். ஆனால் சாதாரண ஒரு பெண்ணாய்  எல்லோர் வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்த ஒரு சராசரித் தமிழன் போல அவளுக்குமெண்டு ஒரு பார்வை இருக்கும் தானே. அதைச் சொல்ல நிச்சயமாய் அவளுக்கு உரிமையுண்டுதானே?

"சிங்களவன் எங்களை அடிமைப் படுத்துறான் எண்டு சொல்லிக்கொண்டு தமிழனைத் தமிழனே ஏமாத்தி அடிமையாய்  வைத்திருந்தது தான் மிச்சம். போராடிச் செத்ததைவிட, உரிமையை மீட்டுத் தருவதாய்ச் சொல்லிய அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட தமிழர்கள் தானே அதிகம்." என்று அவள் சொல்லப்போனால் முளைச்சு மூணுஇல்லை விடேல்லை நீயெல்லாம் போய் அரசியல் தெரியுமெண்டு கதைக்கிறியா என்று அரசியலைக் கரைச்சுக் குடிச்ச மேதாவிப் பெரியவர்கள் சொல்லுவினம். அதுவேறை அவளின் வீட்டிலை நவக்கிரகம் மாதிரி ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசியல் பார்வைகள். ஒரு வீட்டிலையே இப்படி ஒன்பதுபேர்  எண்டா நாட்டிலை கேட்கவா வேணும்? மக்கள் பாவம்.

"அண்டைக்கு மட்டும் அமிர்தலிங்கத்தை சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ சமாதானம் வந்திருக்கும். எங்கடை உரிமையும் கிடைச்சிருக்கும்." கூடவேயிருந்த பெரியண்னர் சொன்னபோது ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.

"அமிர்தலிங்கம் அற்ப சலுகைகளுக்கு  விலைபோன ஒரு துரோகி."
"நாங்கள் தான் முதல்ல போராட்டத்தை தொடக்கினம். அதிலை ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கிறம் தெரியுமே."
"உங்கடை ஆக்கள் கொள்ளையடிச்ச நகையை எல்லாம் அவங்கள் தானே மீட்டது"
"காதலுக்காக துவக்கெடுத்து சுட்டவந்தானே.. இவன் எப்படி மக்களைக் காக்கிறது?"
"தலைவர் ஒழுக்கத்தைத்தான் முன்னிலைப் படுத்துறவர். அதாலைதான் இத்தினை வருஷ போராட்டத்திலயும் அவங்கள் பெண்கள் விசியத்திலை எல்லை மீறினதில்லை. மீறவிட்டதுமில்லை."
"அதுக்கு நடுச் சந்தியில கட்டி வைச்சு அதில சுடுறதே. பாக்கிறதுகளுக்கு மனநிலை பாதிக்குமேல்லே"
"தண்டனை கூடவாயிருந்தால் தான் குற்றங்கள் குறையும். ஆனா அதுக்காண்டி எல்லாரும் நீதியைக் கையிலை எடுக்ககூடாது."
சத்தியமாய் இவை ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நவக்கிரகங்களின்  வாதப் பிரதிவாதங்கள். ஒருவரை ஒருவர் ஆமோதிப்பதுபோல் எதிர்ப்பது, எதிர்ப்பதுபோல் ஆமோதிப்பது. என்ன கன்றாவி அரசியலோ..?

"நாங்கள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லதை நினைச்சுத்தான் தொடங்கினம். ஆனா இவங்கள்  வந்து  எல்லாரையுமே போட்டுத்தள்ளிட்டு தாங்கள் தான் மக்களிண்டை ஏகப் பிரதிநிதி எண்டு சொல்லிக்கொண்டு சனத்தைச் சாகடிச்சது தான் மிச்சம்." என்ற சித்தப்பாவின் முப்பதுவருஷ அரசியல் அனுபவத்தில் வந்த வார்த்தைகளில் உண்மையாகவே ஆதங்கம் இருந்தது.




உண்மைதானே.. இதுவரை தனிநாடு, தனிக்கொடி எண்டுசொல்லிக்கொண்டு, ஏத்தின கொடிகளைவிட போர்த்திய கொடிகள் தானே அதிகம். ஆனால் நீங்களெல்லாம் ஆளுக்கொரு கட்சி எண்டு தொடக்கிவைத்து 'சகோதரயுத்தம்' எண்டு உங்களுக்கையே அடிபட்டுச் சாகாமல் கொஞ்சம் தன்னும்  விட்டுக்கொடுத்துப் போயிருந்தால் இவ்வளவும் வந்திருக்காதே. அது இயக்கமாகவே இருக்கட்டும்.

தமிழனைத் தமிழனே விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகமுடியவில்லை. ஆயிரத்தெட்டு கொடிகள்.. கொள்கைகள்.. முரண்பாடுகள்.. பிறகெப்படி சிங்களவன் மட்டும் எங்களைப் புரிந்துகொள்வது? சமாதானம் பேசுவது?  ஒருவனுடன் பேசினால் இன்னொருவனுக்கு குமைச்சல். அவர்களும்தான் எத்தனை பேரைப் பார்த்து எத்தனை விதமாய் பேசி எத்தனை கொள்கைகளை விளங்கி எத்தனை தீர்வை வைத்து எத்தனை பேரை சமாதானப் படுத்தி எத்தனை திருத்தங்களைச் செய்து எத்தனை அறிக்கைகளை வாசித்து எத்தனை பேரின் இத்தனை எத்தனை கேள்விகளுக்கு என்று பதிசொல்வது?

உலகமறிய சமாதானக் கொடியுடன் வந்தவர்களையே ஒட்டுமொத்தமாய் சுட்டுப்போட்டுவிட்டு தமக்கு எதுவுமே தெரியாதென்றவர்களுக்கு நாட்டுக்குள்ளயே காதும் காதும் வைத்ததுபோல இத்தனை கொடிகளையும் கொள்கைகளையும் கிழித்துப் புதைக்க எத்தனை நாளாகும்? எல்லாம் வெறும் கண்துடைப்பு. தமக்கு வாலாட்டுபவர்களைத் தடவிக் கொடுத்து சீறிப் பாய்பவர்களை சுட்டுத்தள்ளுவது தானே மேல்த்தட்டு அரசியல். அது தெரிந்திருந்தும் கையில் ஒரேயொரு ஆசனத்தை மட்டும்  வைத்துக்கொண்டு "நாங்கள் தமிழரின் உரிமைகளை மீட்டுத்தருவோம்" என்று சொல்வது உங்களுக்கே அபத்தமாய் தெரியவில்லை?

மக்களுக்கு அரசியலை புரியவிடாமல் அரசியல் செய்ய எங்கடை தமிழனால் மட்டும்தான் முடியும். இல்லையெண்டால் நாப்பத்தெட்டாம் ஆண்டு ஒரேநாட்டில ஒரேகொடியில ஒண்டா சேர்ந்து இருப்பம் எண்டு சொன்னபோது தலையாட்டிய மக்கள், பின்பு இல்லை பிரிவதுதான் சரி என்றபோது அதுக்கும் சரி எண்டுசொல்லி துவக்குத் தூக்கியிருக்க மாட்டினம். ஆரம்பத்தில் நல்லவனாய் முட்டாளாய்த் தெரிந்த சிங்களவன் திடீரென்று அறிவாளியாகி கெட்டவனாய் ஆகிவிட்டிருந்தான்.

பின்பு ஒருவாறு கஷ்டப்பட்டு அரசாங்கத்துடன் சமரசம் செய்து தங்கள் அற்ப சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நேரத்தில வந்து அவர்களின் அரியணைக்குக் காவலாய் இருப்பார்கள் எனநினைத்து வளர்க்கப்பட்டவர்களே எதிராய்த் திரும்பி  தனிக்கொடி, தனித் தமிழீழம் என்று சொல்லி  அவர்களின் நெஞ்சுக்கே குறிவைத்தால் ரத்தம் கொதிக்காதா என்ன?




***** 
தொடரும்..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்