முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : சிவப்பு மஞ்சள்

பாகம் ஐந்து : சிவப்பு மஞ்சள்


வீதியின் இருமருங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. வாத்தியங்கள் முழங்க மரியாதை அணிவகுப்புடன் உருவப் பதாதைகள் முன்னே ஏந்திச் செல்லப்படுகின்றன. தளபதிகள் புடைசூழ, வீதிகளெங்கும் மக்கள் மௌனமாய் கண்ணீர் சிந்த போராட்ட வரலாற்றில் பல பரிணாமங்களை எட்ட வைத்த ஒரு மாபெரும் தளபதி, ராஜமரியாதையுடன் கொண்டு செல்லப்படுகிறான்.

பாதநி ஸகா, ரிஸாநி பா... பின்னணியில் சோககீதம் இசைக்கிறது.

பொன்னியின் செல்வனுக்கு ஒரு வந்தியத்தேவனாய், தனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து போராட்ட வெற்றிக்கு வலுச்சேர்த்த தளபதிக்கு, தனது இறுதி வணக்கத்தைச் செலுத்தினார் தலைவர். போராளிகளும் சக தளபதிகளும் சிரம் தாழ்த்தி தமது வீரவணக்கத்தைச் செலுத்தினர். அவர்கள் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு மாபெரும் இழப்பை சந்தித்திருந்தனர்.

முக்கிய தளபதிகள் ஒவ்வொருவராய் வந்து இறுதி வணக்கம் செலுத்தி உரையாற்றினர்.

"இவர் போராட்டத்துக்கு ஆற்றிய பங்கு உலகத்தினால் வெளிப்படையாக விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. காரணம் அவர் தலைவரின் எண்ணத்தில் உருவாகும் நவீன தொழிநுட்ப, ராணுவ சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும் மிக முக்கிய பணியை செய்துகொண்டிருந்தார். அதனால் இவரது செயல்பாடுகள் எப்போதும் ரகசியமாகவே வைக்கப்பட்டன."

"விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது, தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார். போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன." - நன்றி இணையம்.

பொருளாதாரத்தடை தீவிரப் படுத்தியிருந்த காலத்திலேயே கிடைத்த பொருட்களைக் கொண்டு சொந்தமாக பல புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கியிருந்தார். ஆட்லறி படைக்கலங்களின் எறிவீச்சின் துல்லியத்தை அதிகரிப்பதற்க்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியின் மாற்றியமைப்புமுதல், எந்தக் கண்ணிவெடியாலுமே தகர்க்கப் படமுடியாது என்று உலகெல்லாம் நினைத்திருந்த பவள்கவச வாகனத்தை செயலிழக்கச் செய்த சொந்தத் தயாரிப்பான  கவச எதிர்ப்புக் கண்ணிகள் வரை,  தமிழனின் புத்திசாலித்தனத்தை உலகுக்குத் தெரியப்படுத்தினார்.

தரையில் மட்டுமல்லாது இவரது கண்டுபிடிப்புக்கள், உத்திகள் கடலிலும் பல வெற்றிகளைத் தேடித் தந்திருந்தன. "ஒவ்வொரு வெற்றிபெற்ற மாபெரும் தாக்குதலின் பின்னாலும் இவரின் பங்களிப்பு மறைமுகமாய் ஆனால் பாரியளவில் இருந்தது" கடற்படைத் தளபதி கருத்துரைத்தார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில், யாழ் நூலக எரிப்பு, கருப்பு ஜூலை போன்ற பல திட்டமிடப்பட்ட தொடர் இனவொடுக்குமுறை நிகழ்வுகள் நடந்த காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பின்னாளில் பல ராணுவ வெற்றிகளுக்கு காரணமாகவிருந்து, இயக்கத்தின் படைய அறிவியல் துறை உருவாவதற்கு அச்சாணியாக இருந்த இவரைக் கௌரவிக்கும் நோக்கில்,  இவரது பெயரிலே புலிகளின் "படைய அறிவியல் இராணுவ தொழிநுட்ப ஆய்வு நிறுவனம்" பின்னர்  உருவாக்கப்பட்டது.
"ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ் வரிசையில் இவரது வாழ்வும் ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது."

"இவர் சாவை எய்தவில்லை, அதன் மூலம் மகிமையை எய்தினார்." என்பது முற்றிலும் உண்மையே.


Ref : SKgryEo553I


௨௦௧௧ கார்த்திகை ௨௭. இது அவரது பத்தாவது மாவீரர்தினம்.

தீலீபன் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை வீட்டில் சண்டைபிடித்துப்போய் பார்த்தவளுக்கு அவரின் இறுதி ஊர்வலத்தின் காணொளியைப் போட்டுப் பார்க்கும் தைரியம் கூட இத்தனை வருடத்தில் இப்போதுதான் வந்திருந்தது. இருபதுவருடமாய் சுதந்திரக்காற்றை சுவாசிக்கத்துடித்த ஒரு மாவீரன், மாலை மரியாதைகளுடன் பெட்டியில் இறுகப்பூட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறான். அவரது கனவுகள் அவருடன்  இருந்தவர்களிடம் விதைத்துச் செல்லப்படுகிறது.


அன்றுபோல் தான் இன்றும்; அவள் அழமாட்டாள். ஆனால் சொல்லவேண்டும். எல்லாவற்றையும் அவனிடம் சொல்லிவிடவேண்டும். அன்று போலவே இன்றுமவன் மௌனமாய் முறுவலிப்பான். கோபப்படுவான். அவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் கட்டிஎழுப்பிய அந்தக்  கனவுதேசத்தை எம்மால் காப்பாற்றமுடியாமல் போனதுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் கனவுகண்ட தலைமுறையை எம்மால் உருவாக்க இயலாமல் போனதுக்காய் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

கோழைகளாய் ஓடி ஓடி ஒளிந்து, கடைசியில் உயிர்ப்பிச்சைகேட்டு உலக வல்லரசுகளிடமெல்லாம் கையேந்தியதைச் சொல்லவேண்டும்... ஒருவிதவையின் கண்ணீருக்கு, ஒருதேசமே பலியிடப்பட்டதை சொல்லவேண்டும்.. இன்னும் எத்தனையோ..

இல்லை.. வேண்டாம்... அவனுக்கு எதுவுமே தெரிய வேண்டாம்.

ஆயிரமாயிரம் மாவீரர்களின் நடுவில் அவனும் நிம்மதியாய், தன் கனவுகளுடனே உறங்கட்டும். ஒருதேசம் சிந்திய ரத்தத்துக்கு, இந்த உலகமே பதில்சொல்லும் நாள்வரும்.. அதுவரை அவர்களை யாரும் எழுப்பாதீர்கள்! 

அவர்கள் கனவுகண்ட சுதந்திரதேசம் அவர்களின் சொந்த மக்களாலே சின்னாபின்னப் படுவதை அவர்கள் பார்க்கவேண்டாம்!

தேநீர்க்கோப்பைகள் எல்லாம் மதுக்கிண்ணங்களானதை அவர்கள் அறியவேண்டாம்!

இத்தனை வருடங்களாய் அவர்கள் கட்டிக்காத்த ஒழுக்கம் இன்று காற்றில் பறப்பது தெரிய வேண்டாம்!

அன்று அவர்கள் உயிர் கொடுத்துக் காத்த தலைமுறை, இன்று காதலுக்காய், பணத்துக்காய், வன்மைத்துக்காய் கொலை, வெட்டு, குத்து, உயிரோடுஎரித்தல் என்று அழிந்து போவதைப்பார்த்து அவர்கள் வருந்த வேண்டாம்! 

இத்தனையையும் தடுக்கமுடியாமல் ஏதிலிகளாய், அவர்களது தியாகங்களை நெருப்பில் போட்டு அவர்கள் கனவுகளை அழித்து அவர்கள் உதிரத்தில் ஏன் தீயேற்றுகின்றீர்கள்? உங்களுக்காய் உங்கள் நிம்மதிக்காய் உங்கள் சுயநலத்திற்காய் அவர்கள் இதுவரை இழந்தது போதும். இனியேனும் அவர்களை நிம்மதியாய் தூங்கவிடுங்கள். 

யாரும் மறந்தும் கூட அழுதுவிடாதீர்கள்.. அவர்களுக்கு கண்ணீர் பிடிக்காது!


***** 


இன்று நம் தாய்நாட்டிலே, அவளது கருவறுப்பதுபோல் அவர்கள் கல்லறைகளிலிருந்து வலுக்கட்டாயமாக எழுப்பப்படுகிறார்கள் நமது சகோதரர்களால். அவர்கள் நிச்சயம் வருவார்கள்.. மீண்டும் வந்து பிறப்பார்கள்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க.. சிவப்பு மஞ்சள் வண்ணங்களின் நடுவே...



அத்தகைய காலத்தினால் அழியாத மாவீரர்களுக்கு, இத்தொடர் சமர்ப்பணம்!!!

நன்றி .
வணக்கம்.

*****

கருத்துகள்

Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
"அவர்கள்" நீதியின் முன் ஏழை, பணக்காரன் பார்த்ததில்லை. தியாகத்தில் படித்தவன், படிக்காதவன் பேதமிருக்கவில்லை. எந்த மதத்தையும் ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. ஆனால் ஒவ்வோர் மனதிலும் கடவுள்களாய் குடிபுகுந்துவிட்டனர். அவர்கள் தாம் எமது வழிகாட்டிகள், நம் தலைமுறை காத்த தெய்வங்கள் என்று சொல்லிக்கொடுப்போம், இனிவரும் தலைமுறைக்கு!

பிரபலமான இடுகைகள்