கௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XF1YQD4
2013 பிறக்கும் வரை எதுவுமே எழுதுவதில்லை.. பதிவுலகத்துக்கு சற்று விடுமுறை கொடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அதையும் மீறி எழுதவைத்தது சமீபத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட டெல்லி மாணவியின் மரணம். கடந்த சில வாரங்களாகவே பல அரசியல் பிரமுகர்கள், செய்தி நிறுவனங்களை மட்டுமல்லாது பதிவுலகையுமே சற்றே கொந்தளிக்க வைத்த நிகழ்வு. பொதுவாகவே பாலியல் வல்லுறவு என்பது எவ்வளவு மிருகத்தனமான செயல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்க்கான அடிப்படைக்காரணி யாரோ எங்கேயோ ஓரிரண்டு மனித மிருகங்களில் மட்டுமே இருப்பதல்ல. ஒவ்வொரு சராசரி மனிதனுக்குள்ளிருக்கும் இருக்கும் அரக்க குணத்தின் முற்றுமுழுதான வெளிப்பாடு ஒரு பெண்ணின்மீது காமம் கலந்து திணிக்கப்படுகையில் அது பாலியல் வல்லுறவாகிறது.
This Photo was Shared on Fb
by some indian friends
என்னடா இது சாதாரண மனிதர்களும் அந்த மிருகங்களும் ஒன்றா என்று கோபப்படுபவர்கள் சற்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கயவர்களையுமே நல்லவர்கள், அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கு என்று வாதிடுவதர்க்காய் நாலு பேர் இருக்கிறார்கள்.. இல்லையெனின் இனிமேலாவது வரத்தான் போகிறார்கள். குறைந்தது ஒரு வக்கீலாவது வந்து காசுக்காக வாதாடுவார். இப்போதே சிலரின் கருத்துக்களைப் பார்க்கையிலே சற்றே வேதனையாகத்தான் இருக்கின்றது. "ஆறுபேர் நிக்கிறாங்கன்னு தெரியுதில்ல? பேசாம சரண்டர் ஆயிருக்கவேணாம்?" என்று ஒரு பெண் விஞ்ஞானி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இன்னும் சிலர் அந்தப்பெண் தனியே ஓர் ஆணுடன் இரவு இவ்வளவு நேரம் கடந்து வெளியே இருந்தது தவறு என்றும் பெண்களின் உடை மற்றும் இத்தகைய நடவடிக்கைகள் தான் ஆண்களின் இவ்வாறான செயல்பாடுகளுக்கு தூண்டுகோலாய் அமைகின்றது என்றும் சொல்கின்றனர்.
சில அதீத தமிழ் உணர்வாளர்கள் இவை எல்லாவற்றுக்கும் மேலேயே போய் தமிழீழத்தில் எங்கள் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளானபோது தற்போது எதிர்ப்பவர்கள் எல்லாம் என்கேபோயிருந்தார்கள் என்று கேள்வி எழுப்புகின்றார்கள். நண்பர்களே உங்களது உள்ளக்குமுறல்கள் புரிகிறது. ஆனால் அதனை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல. முதலில் மனிதநேயம், அதன்பின்புதான் மற்றவையெல்லாம். இதையே சற்று வேறுவிதமாய் சிந்தித்துப் பாருங்கள். உலகத்தின் அத்தனை வஞ்சகங்களையும் கயமைகளையும் கொடுமைகளையும் அனுபவித்து மீண்டு வந்த ஒரு இனத்தினால் நிச்சயமாக மற்றவர்களின் அத்தகைய அவல நிலையை முழுதாய் உணர்ந்து ஆறுதல்படுத்த முடியும். எனவே இத்தகைய சூழலில் நாங்கள் எதிர்க்கவேண்டியது மனிதனுக்குள்ளிரும் இத்தகைய அசுர குணங்களையே ஒழிய சக மனிதனையல்ல.
இந்தியாவில் இருபது நிமிடத்துக்கு ஒரு பாலியல் வல்லுறவு நடைபெறுவதாய் தரவுகள் சொல்கின்றன. டெல்லி சம்பவம் ஓய்ந்துபோகு முன்னரே தமிழ் நாட்டில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்கு. எனவே இது இன்று நேற்றுடன் முடிந்துபோகப்போகும் விடயமல்ல. மரணதண்டனைமூலம் இத்தகைய குற்றங்களை நிச்சயமாக ஒழிக்கமுடியாது. ஏனெனில் இத்தகையவர்கள் ஓர் அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது மட்டுமல்லாது பெரும்பாலும் சாவில் நாட்டம் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். ஏற்கனவே இறந்து போனவர்களை மீண்டும் தூக்கிலேற்றுவதில் எந்தவித அர்த்தமில்லை என்றே படுகின்றது.
அப்படியென்றால் இதற்குத் தீர்வுதான் என்ன? சுயமாற்றம்.. அதன் மூலம் மட்டுமே நாம் உலக மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அந்த ஆறுபேர் அளவுக்கு இல்லையெனிலும் நாம் ஒவ்வொருவருமே உடலாலோ மனதாலோ தவறு செய்துகொண்டு தானிருக்கிறோம். பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராகக் குரல்கொடுப்போரில் எத்தனைபேர் நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை மனத்தால் கூட ஒருபெண்ணை அல்லது சினிமா நடிகைகளை அத்தகைய நிலைக்கு உள்ளாக்கியதில்லை? எனவே ஒவ்வொருவரும் தாமாகப் பார்த்து மாறாவிட்டால் இந்த பூமியில் இயேசு, புத்தன் என்று எத்தனை மகான்கள் வந்து சென்றாலுமே யாராலுமே எந்த மாற்றத்தையுமே கொண்டுவர முடியாது.
Mr. MM Singh!
Do you really think a girl could travel alone like this in your country?
கருத்துகள்