குற்றவுணர்வு


கடந்த காலங்களின் நினைவுகளை 
அழித்துவிட்டதாய்
அவை தந்த ரணங்களை
ஆற்றிவிட்டதாய் 
ஆறுதல்கொள்ளும் ஒவ்வொருமுறையும் 

ஏதோவோர் புகைப்படம்.. 
நினைவுகளை கிளறி விடலாம் 
ரணங்களை மீண்டும் கிண்டிப் பார்க்கலாம் 
ஏன் எதற்கு என்று அறியாத வலிகள் 
ஏதோவோர் குற்றவுணர்வு 

பாடசாலை விட்டுவரும் நேரங்களில்
மிதிவண்டியில் லாவகமாக
காவல்துறைக்குப் போக்குக்காட்டி 
அருகருகே வரும் சில நிமிடங்களில் 
பலவற்றை பேசியிருக்கிறோம் 
எதுவும் நினைவிலில்லை 
ஒன்றைத் தவிர..

போவது பற்றி விவாதிக்கையில் 
உன் விருப்பம் உரைக்காமலே 
நீ போய்விட்டாய்  
நினைத்ததை முடிக்காமல் 
நான் மட்டும்
உயிருடன் இருக்கிறேன்
நம் புகைப்படத்தைப் பார்த்தபடி 
அழக்கூடத் தெம்பில்லாமல்..






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)